திருஞானசம்பந்தர் தேவாரம் |
மூன்றாம் திருமுறை |
3.50 திருத்தண்டலைநீணெறி பண் - கௌசிகம் |
விரும்புந் திங்களுங் கங்கையும் விம்மவே
சுரும்புந் தும்பியுஞ் சூழ்சடை யார்க்கிடங்
கரும்புஞ் செந்நெலுங் காய்கமு கின்வளம்
நெருங்குந் தண்டலை நீணெறி காண்மினே.
|
1 |
இகழுங் காலன் இதயத்தும் என்னுளுந்
திகழுங் சேவடி யான்திருந் தும்மிடம்
புகழும் பூமக ளும்புணர் பூசுரர்
நிகழுந் தண்டலை நீணெறி காண்மினே.
|
2 |
பரந்த நீலப் படரெரி வல்விடங்
கரந்த கண்டத்தி னான்கரு தும்மிடஞ்
சுரந்த மேதி துறைபடிந் தோடையில்
நிரந்த தண்டலை நீணெறி காண்மினே.
|
3 |
தவந்த என்புந் தவளப் பொடியுமே
உவந்த மேனியி னானுறை யும்மிடஞ்
சிவந்த பொன்னுஞ் செழுந்தர ளங்களும்
நிவந்த தண்டலை நீணெறி காண்மினே.
|
4 |
இப்பதிகத்தில் ஐந்தாம் செய்யுள் சிதைந்து போயிற்று.
|
5 |
இப்பதிகத்தில் ஆறாம் செய்யுள் சிதைந்து போயிற்று.
|
6 |
இப்பதிகத்தில் ஏழாம் செய்யுள் சிதைந்து போயிற்று.
|
7 |
இலங்கை வேந்தன் இருபது தோளிற
விலங்க லில்லடர்த் தான்விரும் பும்மிடஞ்
சலங்கொள் இப்பி தரளமுஞ் சங்கமும்
நிலங்கொள் தண்டலை நீணெறி காண்மினே.
|
8 |
கருவ ருந்தியின் நான்முகன் கண்ணனென்
றிருவ ருந்தெரி யாவொரு வன்னிடஞ்
செருவ ருந்திய செம்பியன் கோச்செங்கண்
நிருபர் தண்டலை நீணெறி காண்மினே.
|
9 |
கலவு சீவரத் தார்கையில் உண்பவர்
குலவ மாட்டாக் குழகன் உறைவிடஞ்
சுலவு மாமதி லுஞ்சுதை மாடமும்
நிலவுதண்டலை நீணெறி காண்மினே.
|
10 |
நீற்றர் தண்டலை நீணெறி நாதனைத்
தோற்று மேன்மையர் தோணி புரத்திறை
சாற்று ஞானசம் பந்தன் தமிழ்வல்லார்
மாற்றில் செல்வர் மறப்பர் பிறப்பையே.
|
11 |
திருச்சிற்றம்பலம் |